மும்பை,: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) - டைட்டன் நிறுவனம் இணைந்து மின்னணுப் பணப்பரிவர்த்தனையில் புதிய முறையான "பேமண்ட் வாட்ச்'சை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் கடைகளில் பொருள்கள் வாங்கும்போது மின்னணு முறையில் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்த முடியும்.
எஸ்பிஐ-யின் "யோனோ' செயலி மூலம் இந்த பணம் செலுத்தும் முறை செயல்படுத்தப்படுகிறது. டைட்டன் நிறுவனத்தின் "பே வாட்ச்' வைத்திருப்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பொதுவாக கடைகளில் உள்ள "ஸ்வைப்பிங்' இயந்திரத்தில் டெபிட் அல்லது கிரெட் கார்டு மூலம்தான் பணம் செலுத்த முடியும். அதே இயந்திரத்தில் கைக்கடிகாரத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவே இதன் சிறப்பம்சமாகும். இதனால் கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. "ஸ்வைப்பிங்' இயந்திரத்தைத் தொட வேண்டிய அவசியமும் இல்லை. இதற்காக அந்த கைக்கடிகாரங்களில் சிறப்பு "சிப்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2000 வரை ரகசிய எண் இல்லாமலும் பணம் செலுத்த முடியும்.
பொருள்களை பலரும் தொட்டு பயன்படுத்துவதாலும் கரோனா பரவும் சூழல் இப்போது உள்ளது. இந்த நிலையில், கார்டுகளைப் பயன்படுத்தாமல் கைக்கடிகாரம் மூலம் பணம் செலுத்தும் வசதி கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது என்று எஸ்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தொழில்நுட்பம் இப்போதுதான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.