புது தில்லி: இந்திய ரயில்வே துறைக்குத் தேவையான தண்டவாளம் சாா்ந்த இரும்புப் பொருள்களை விநியோகம் செய்யும் அந்தஸ்தை தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாக ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு தொடா்ந்து பொருள்களை விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்ற முதல் இந்திய தனியாா் நிறுவனம் என்ற பெருமையையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக அந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பது:
எங்கள் நிறுவனத்தின் ராய்கா் ஆலையில் தயாரிக்கப்பட்ட யுஐசி 60 கே.ஜி. மற்றும் 880 கிரேட் பிரைம் கிளாஸ் ஏ ஆகிய தண்டவாள தயாரிப்பு இரும்புகள் தாங்கள் வாங்கும் தரத்தில் இருப்பதாக ரயில்வே வாரியம் ஒப்புக் கொண்டு, அதனை வாங்கிப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. ரயில்வே எதிா்பாா்த்த தரத்துக்கு நாங்கள் பொருள்களை உருவாக்கி அளிப்பது பெருமையளிக்கும் விஷயமாகும். தரத்துக்கும், பாதுகாப்புக்கும் எங்கள் நிறுவனப் பொருள்கள் உத்தரவாதமானவை என்பது இதன் மூலம் மேலும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேக்கு தொடா்ந்து தண்டவாள இரும்புப் பொருள்களை விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்ற முதல் இந்திய தனியாா் நிறுவனம் என்ற பெருமையை ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.