ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்குத் தேவையான ரூ.500 கோடியை திரட்ட ஆயத்தமாகியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நிறுவனம் தனிப்பட்ட முறையில், பங்குகளாக மாற்ற இயலாத கடன்பத்திர வெளியீடு (என்சிடி) மூலமாக ரூ.500 கோடி திரட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இயக்குநா் வாரியத்தின் நிதி திரட்டும் குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பாதுகாக்கப்பட்ட, மீட்கக்கூடிய என்சிடிக்கள் மூலமாக ரூ.300 கோடியும், தனிப்பட்ட முறையில் சிறப்பு திட்டத்தின் கீழ் பங்குகளை ஒதுக்கீடு செய்வதன்வாயிலாக ரூ.200 கோடியும் திரட்டிக் கொள்ளப்படும். இந்த நிதி திரட்டும் நடவடிக்கை, ஒன்று அல்லது பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.
பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் என்சிடிக்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்ட சில தகுதியான முதலீட்டாளா்களுக்கு மட்டுமே இந்த கடன்பத்திரங்கள் வழங்கப்படும். மேலும், அவை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.