எச்.டி.எஃப்.சி நிறுவனம் கடன்பத்திரங்கள் மூலம் ரூ.3,000 கோடியை திரட்டிக் கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டை திரட்டிக் கொள்ளும் வகையில் எச்.டி.எஃப்.சி நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிடவுள்ளது . தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் இந்த கடன்பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பாதுகாப்பான- மீட்கக்கூடிய வகையிலான, பங்குகளாக மாற்ற இயலாத இந்த கடன்பத்திர வெளியீட்டின் மூலமாக ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரையில் மூலதனம் திரட்டிக் கொள்ளப்படும்.
இந்த தொகை, நிறுவனத்தின் வீட்டு வசதி கடனுக்கான நிதியளிப்பு அல்லது மறுநிதியளிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று எச்.டி.எஃப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.