கனிமங்கள் உற்பத்தியை அடுத்த 7 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: சுரங்கத் துறையைப் பொருத்தவரையில் மத்திய அரசு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய போட்டி ஏல செயல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கனிம வள துறையில் ஆய்வுப் பணிகளை முடுக்கிவிடுவதற்காக, தேசிய கனிம ஆய்வு அமைப்பும் (என்எம்இடி) ரூ.1,500 கோடி நிதியத்தில் உருவாக்கப்படவுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் அடுத்த 7 ஆண்டுகளில் கனிமங்கள் உற்பத்தியை 200 சதவீதம் அதிகரிக்கும். பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் சுரங்கத் துறையானது மிக முக்கிய பங்கை வகிக்கிறது என்றர் அவர்.