கடந்த இரண்டு நாள்களாக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, பங்குகளின் விலை குறைந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை கச்சா எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டு உற்பத்தி குறைந்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இது, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 262 புள்ளிகள் சரிந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்திலும் சென்செக்ஸ் 642 புள்ளிகளை இழந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லாப நோக்கு விற்பனை காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் நடுத்தர நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.2,72,593.54 கோடி குறைந்து ரூ.1,39,70,356.22 கோடியானது.