பொதுத் துறையைச் சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தின் நான்காம் காலாண்டு தனிப்பட்ட நிகர லாபம் 48.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
என்டிபிசி நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.22,545.61 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.23,617.83 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். செலவினம் ரூ.20,229.26 கோடியிலிருந்து குறைந்து ரூ.19,008.44 கோடியாக இருந்தது.
செலவினம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்ததையடுத்து, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.2,925.59 கோடியிலிருந்து 48.7 சதவீதம் அதிகரித்து ரூ.4,350.32 கோடியாகி உள்ளது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.85,207.95 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.92,179.56 கோடியானது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.10,343.17 கோடியிலிருந்து 13.60 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.11,749.89 கோடியைத் தொட்டது.
கடந்த நிதியாண்டுக்கு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத (ரூ.2.50) இறுதி ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளது என என்டிபிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.