இந்தியாவில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் கணினி விற்பனை சந்தையில் 8.3 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐடிசி நிறுவனம் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் கணினி விற்பனை 8.3 சதவீதம் குறைந்து 21.5 லட்சமாக இருந்தது. தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக கணினி விற்பனை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த கணினி சந்தையில் விற்பனை விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, இணையதளம் விற்பனை மூலமாக பள்ளிகளுக்கான கணினி விற்பனை அதிகரிக்கும்போது நுகர்வோர் சந்தை வேகமெடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் ஒட்டுமொத்த கணினி விற்பனையில் ஹெச்பி நிறுவனம் 28.1 சதவீத பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, டெல் நிறுவனம் 25.9 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தையும், லெனோவா நிறுவனம் 25.2 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும், ஏஸர் 11.7 சதவீத சந்தை பங்களிப்புடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
கணினி விற்பனையில் நோட்புக் பிசி (மடிக்கணினி) பிரிவின் பங்களிப்பு 61.4 சதவீதமாக உள்ளது. இதன் விற்பனை 9.8 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் ஐடிசி தெரிவித்துள்ளது.