வருவாய் அடிப்படையில் பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை (ஐஓசி) பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.6.23 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம், ஐஓசி நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.6.17 லட்சம் கோடியாக மட்டுமே காணப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் வருவாய் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
அதேபோன்று ஐஓசியைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமான லாபத்தை ரிலையன்ஸ் ஈட்டியுள்ளது. அதன்படி, 2018-19-இல் ஐஓசி ரூ.17,274 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.39,588 கோடி நிகர லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு வரையில் அதிக லாபமீட்டும் நிறுவனமாக இருந்து வந்த ஐஓசி 2018-19-இல் தனது இடத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இழந்தது. கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே ஓஎன்ஜிசி நிறுவனம் ரூ.22,671 கோடியை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது. இன்னும், கடந்த நிதியாண்டுக்கான முழுமையான நிதி நிலை முடிவுகளை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
வருவாய் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை பிடித்திருந்தாலும், அந்நிறுவனத்துக்கு மொத்த கடன் சுமை ரூ.2.87 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால், ஐஓசி நிறுவனத்தின்குறுகிய மற்றும் நீண்ட கால மொத்த கடன் ரூ.92,700 கோடி என்ற அளவில் குறைவாகவே உள்ளது.