சுந்தரம் பைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் பிஎன்பி பரிபாவின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 64.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீநிவாஸ் ஆச்சார்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனம் ரூ.25.74 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.15.68 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 64.1 சதவீதம் அதிகமாகும்.
2018-19 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.144 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.145 கோடியாக இருந்தது. மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 2.95 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் கடன் சந்தையிலிருந்து பல்வேறு வழிமுறைகளில் ரூ.4,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளோம். கடன் வழங்கல் நடவடிக்கையில் நடப்பாண்டில் 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதே நிறுவனத்தின் இலக்கு என்றார் அவர்.