புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் மார்ச் காலாண்டில் 19.82 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் கார்ப்பரேஷன் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ.7,395.19 கோடி வருவாய் ஈட்டியது.
இது, 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.6,788.43 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். நிகர லாபம் ரூ.1,175.47 கோடியிலிருந்து 19.82 சதவீதம் அதிகரித்து ரூ.1,408.49 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் வாகன விற்பனை 10,45,378 என்ற எண்ணிக்கையிலிருந்து 14 சதவீதம் வளர்ச்சி கண்டு 11,93,590-ஆனது.
2018-19 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.25,617.27 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.30,249.96 கோடியாகவும், நிகர லாபம் ரூ.4,218.95 கோடியிலிருந்து 16.79 சதவீதம் அதிகரித்து ரூ.4,927.61 கோடியாகவும் இருந்தது.
நிறுவனத்தின் இயக்குநர் குழு பங்கு ஒன்றுக்கு ரூ.60 (600%) ஈவுத்தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளதாக செபியிடம் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.