மும்பை: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 42,005 கோடி டாலரை (ரூ.29.40 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 136 கோடி டாலர் (ரூ.9,520 கோடி) உயர்ந்து 42,005 கோடி டாலரைத் தொட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 17 கோடி டாலர் உயர்ந்து 41, 869 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 135 கோடி டாலர் உயர்ந்து 39,222 கோடி டாலராக காணப்பட்டது.
தங்கத்தின் கையிருப்பில் மாற்றம் எதுவுமின்றி 2,302 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 30 லட்சம் டாலர் அதிகரித்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 70 லட்சம் டாலர் உயர்ந்து 335 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக 42,603 கோடி டாலரை எட்டி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரன்சி நிலவரம்
(இந்திய ரூபாயில்)
அமெரிக்கா டாலர் 70.30
ஐரோப்பா யூரோ 78.47
பிரிட்டன் பவுண்ட் 89.41
மலேசியா ரிங்கிட் 16.83
சிங்கப்பூர் டாலர் 51.03