வேளாண் துறையில் எரிசக்தி ஆற்றலை திறம்பட கையாளுவதற்கு உதவுவதற்காக டாஃபே நிறுவனம்-பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி கழகம் (பிசிஆர்ஏ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
உலகளவில் டிராக்டர் தயாரிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனமாக டாஃபே விளங்குகிறது. இந்நிறுவனம், வேளாண் துறையில் எரிசக்தி பயன்பாட்டை திறமையான முறையில் விவசாயிகள் கையாண்டு பலனடைவதற்காக பிசிஆர்ஏ-வுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பிசிஆர்ஏ, டாஃபே நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக வேளாண் கருத்தரங்கு மற்றும் மேளாக்களை நடத்தும். விவசாயிகள் தங்களுடைய டிராக்டர்களை முறையாக பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து இந்த கருத்தரங்கங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதன் பயனாக, விவசாயிகள் எரிபொருள் நுகர்வை வெகுவாக குறைப்பதுடன், உற்பத்தி மற்றும் லாபம் அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.
மேலும், விவசாயிகள் வளங்களை திறம்பட பயன்படுத்துவதன் அவசியம், அதனால் விளையும் பயன்கள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்படும்.
டாஃபே நிறுவனத்துக்கு நாடெங்கிலும் உள்ள விநியோகஸ்தர்கள் கட்டமைப்பு மூலம் பிசிஆர்ஏ இந்த பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.