வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த உள்நாட்டு நிறுவனமான மாரிக்கோவின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2018-19 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.1,609 கோடி வருவாய் ஈட்டியது.
இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ரூ.1,503 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.183 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.405 கோடியானது.
2018-19 முழு நிதியாண்டில் வருவாய் ரூ.6,333 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,334 கோடியாக இருந்தது.
அதேபோன்று, நிகர லாபமும் ரூ.827 கோடியிலிருந்து 37.24 சதவீதம் அதிகரித்து ரூ.1,135 கோடியை எட்டியது என செபி-யிடம் மாரிக்கோ தெரிவித்துள்ளது.
பாராசூட் தேங்காய் எண்ணெய், சஃபோலா பிராண்டுகளில் பொருள்களை விற்பனை செய்து வரும் மாரிக்கோ நடப்பு நிதியாண்டில் மூலதன செலவினம் ரூ.1,25,150 கோடியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.