குறைந்த மழைப்பொழிவு காரணமாக 2018-19-ஆம் பருவத்தில் நாட்டின் பருத்தி உற்பத்தி 315 லட்சம் பேல்களாக குறையும் என இந்திய பருத்தி கழகம் (சிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் பருத்தி பருவமாக கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு 2018-19 பருவத்தில் பருத்தி உற்பத்தி 365 லட்சம் பேல்களாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதை மதிப்பீடுகளின் அடிப்படையில் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தி 315 லட்சம் பேல்கள் அளவுக்கே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.
ஏனெனில், பருத்தி அதிகம் விளையும் மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மூன்றாவது மற்றும் நான்காவது முறை பறிப்புகளுக்காக காத்திருக்காமல் 70-80 சதவீத பகுதி விவசாயிகள் பருத்தி செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்றவற்றால் நடப்பு பருவத்தில் பருத்தி உற்பத்தியில் கணிசமான சரிவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலத்தில் முந்தை மதிப்பீட்டை காட்டிலும் 2 லட்சம் பேல்கள் பருத்தி உற்பத்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் உற்பத்தி தலா 1 லட்சம் பேல்கள் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 அக்டோபர் முதல் 2019 ஏப்ரல் வரையிலான கால அளவில் பருத்தி உற்பத்தி 314 லட்சம் பேல்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், கடந்தாண்டு பருவ தொடக்கத்தில் கையிருப்பில் இருந்த 28 லட்சம் பேல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 7.27 லட்சம் பேல்களும் அடங்கும்.
அதேபோல், உள்நாட்டில் பருத்தி நுகர்வு 183.75 பேல்கள் என மதிப்பிட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் சிஏஐ தெரிவித்துள்ளது.