பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவைக் கண்டது.
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி இல்லாததது மற்றும் அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் உருவாகியுள்ள வர்த்தக பதற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்து 38,276 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 100 புள்ளிகள் சரிந்து 11,497 புள்ளிகளில் நிலைபெற்றது.