முருகப்பா குழும நிறுவனமான சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில், சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸின் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் ரூ.696.70 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.549.91 கோடியுடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகம்.
சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸில் 46.39 சதவீத பங்குகளை வைத்துள்ள துணை நிறுவனமான சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & பைனான்ஸ் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் ரூ.30,451 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது. இது 2017-18 நிதியாண்டில் வழங்கப்பட்ட கடனான ரூ.25,114 கோடியுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் உயர்வாகும். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.918 கோடியிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து ரூ.1,186 கோடியானது.
மற்றொரு துணை நிறுவனமான சோழமண்டலம் எம்எஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரீமியம் வசூல் கடந்த நிதியாண்டில் ரூ.4,113 கோடியிலிருந்து 10.67 சதவீதம் அதிகரித்து ரூ.4,552 கோடியானது. அதேசமயம், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.204.89 கோடியிலிருந்து குறைந்து ரூ.198.20 கோடியானது. இன்னொரு துணை நிறுவனமான சோழமண்டலம் எம்எஸ் ரிஸ்க் சர்வீசஸ் வருவாய் கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.56.28 கோடியிலிருந்து சரிந்து ரூ.40.72 கோடியானது. அதேசமயம் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2.78 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.3.52 கோடியானது.
சென்ற மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு 65 சதவீத (0.65 காசுகள்) இறுதி ஈவுத் தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சோழமண்டலம் பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.