டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், வரும் ஏப்ரல் மாதம் முதல் சில மாடல்களுக்கான கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் என். ராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இடு பொருள்களின் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட கூடுதல் செலவினத்தை, தயாரிப்பு நடவடிக்கைகளில் நேர்த்தியைக் கையாண்டு சிக்கனத்தை கடைபிடித்தன் மூலம் நிறுவனம் இதுவரையில் ஈடு செய்து வந்தது. ஆனால், தற்போது விலை உயர்வானது தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் காரணமாக, விலை அதிகரிப்பில் ஒரு சிறு பகுதியை வாடிக்கையாளர் மீது சுமத்துவது என்ற முடிவுக்கு நிறுவனம் வந்துள்ளது. அதன் எதிரொலியாக வரும் ஏப்ரல் மாதம் முதல் சில குறிப்பிட்ட மாடல்களுக்கான கார்களின் விலையை உயர்த்த டொயோட்டா கிர்லோஸ்கர் முடிவெடுத்துள்ளது என்றார் அவர். இருப்பினும், எந்த மாடல்களுக்கான கார்களின் விலை உயர்கிறது என்பது குறித்து டொயோட்டா வெளிப்படையாக அறிவிக்கவில்லை.