நடப்பு நிதியாண்டில் 8 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான காகு நாகநிஷி பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஹோண்டாவின் அமேஸ் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதன் காரணமாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கால அளவில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 6.5 சதவீதத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ரூ.17.7 லட்சம் முதல் ரூ.22.3 லட்சம் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவிக் செடன் வகை கார்கள் இந்திய சந்தையில் சொகுசு வகை பிரிவில் ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்யும்.
இதையடுத்து, மார்ச் மாதத்தில் மட்டும் 17,000 ஹோண்டா கார்கள் விற்பனையாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் கார் விற்பனை 1.8 லட்சத்தைத் தொடும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த நிதியாண்டில் 1.7 லட்சம் கார்களை விற்று நிறுவனம் 8 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்டியது. அதேபோன்று, நடப்பாண்டிலும் விற்பனை வளர்ச்சி 8 சதவீதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டின் தொடக்கம் மோட்டார் வாகன துறைக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால், அதன் பின்னர் கேரளாவில் வெள்ளம், எரிபொருள்கள் விலையேற்றம், நிதி நெருக்கடி காரணமாக வாடிக்கையாளர்கள் எளிதில் கடன்பெற முடியாத சூழ்நிலை ஆகியவை மோட்டார் வாகன துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தின.
மார்ச் மாதத்திலும் கார் விற்பனை குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் காரணமாக, இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவீதமாகவே இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், எங்களைப் பொருத்தவரையில் அந்த வளர்ச்சியானது இரண்டு மடங்காகவே இருக்கும் என்றார் அவர்.