சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் டாடா மோட்டார் நிறுவனம் 4 புதிய ரக கார்களை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 89-ஆவது ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள மோட்டார் நிறுவனங்கள் தங்களது புதிய ரக கார்களை அறிமுகம் செய்யும். எதிர்காலத்தில் தங்களது நிறுவனத்தின் சார்பில் வெளிவரவுள்ள கார்களின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து இந்தக் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
டாடா மோட்டார் நிறுவனம், ஒமேகா ரகத்தில் இரண்டாவது எஸ்யுவி, பஸார்ட் (இந்தியாவில் ஹாரியர்), 7 இருக்கைகள் கொண்ட எச்2எக்ஸ் எஸ்யுவி ரக கார், பேட்டரியில் இயங்கக் கூடிய அல்ட்ரோஸ் ஹாட்ச்பேக் ஆகிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில், அல்ட்ரோஸ் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
அல்ட்ரோஸ் ரகக் காரில் பெட்ரோல், டீசல் என்ஜினும் விருப்பத் தேர்வாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரத்தன் டாடா, டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.