இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 42,180 கோடி டாலராக (ரூ.29.52 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு வெகுவாக அதிகரித்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 180 கோடி டாலர் (ரூ.12,600 கோடி) அதிகரித்து 42,180 கோடி டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 199 கோடி டாலர் உயர்ந்து 42,000 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 194 கோடி டாலர் உயர்ந்து 39,413 கோடி டாலராக இருந்தது.
கடந்த சில வாரங்களாக நிலையான அளவில் இருந்த தங்கத்தின் கையிருப்பு கணக்கீட்டு வாரத்தில் 6 கோடி டாலர் சரிந்து 2,295 கோடி டாலரானது.
அதேபோன்று, சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 23 லட்சம் டாலர் சரிந்து 144.3 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 53 லட்சம் டாலர் வீழ்ச்சியடைந்து 333.1 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி வாரத்தில் தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாற்று உச்சமாக 42,602 கோடி டாலரை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.