உள்நாட்டைச் சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது ஆலைகளில் 13 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்தப் போவதாக சனிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-க்கு தெரிவித்துள்ளதாவது:
நாடு தழுவிய அளவில் நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள மோட்டார் வாகன தயாரிப்பு ஆலைகளில் நடப்பு காலாண்டில் 5-13 நாள்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண் துறைக்கான உபகரணங்கள் தயாரிப்பும் இந்த கால கட்டத்தில் நிறுத்தப்படவுள்ளது.
இந்த உற்பத்தி நிறுத்தத்தால் சந்தையில் நிறுவனத்தின் வாகன விற்பனையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. போதுமான அளவில் சந்தையில் ஏற்கெனவே வாகனங்கள் கையிருப்பு உள்ளது. சந்தையில் தேவையை சரி செய்து கொள்வதற்காகவே இந்த உற்பத்தி நிறுத்தம் கடைபிடிக்கப்படவுள்ளது என்று செபி-யிடம் மஹிந்திரா தெரிவித்துள்ளது.
வாகனங்களின் உற்பத்தி அதிகரித்ததையடுத்து, மாருதி சுஸுகி நிறுவனம் தனது குர்கான், மானேசர் ஆலையில் கடந்த மாதம் ஒரு நாள் மட்டும் உற்பத்தியை நிறுத்தியது.
சந்தையில் மோட்டார் வாகனங்களின் விற்பனை தற்போது மந்தமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக, சந்தையில் வாகனத்தின் தேவைக்கு ஏற்ப அதன் உற்பத்தியை குறைக்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனை 17 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கடந்த 8 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும். நுகர்வோர் மன நிலையில் மாற்றம் மற்றும் பணப்புழக்கம் குறைவு ஆகியவை கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.