இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்பட்டதையடுத்து முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதலீட்டாளர்கள் நிதி நிலைமை நன்கு உள்ள அத்துறையைச் சேர்ந்த குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளில் மட்டும் தங்களது முதலீட்டை அதிகரித்தனர். இது, வர்த்தக நேர இறுதியில் பங்கு வர்த்தகம் சூடுபிடிக்க காரணமாக அமைந்தது.
இதைத்தவிர, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு தொழில்நுட்பத் துறை பங்குகளின் விற்பனைக்கு உத்வேகம் தருவதாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் தொலைத்தொடர்பு, நிதி, நுகர்வேர் சாதனங்கள், வங்கி, தொழில்நுட்ப துறை குறியீட்டெண் 0.79 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேநேரம், மின்சாரம், எரிசக்தி, மருந்து, ரியல் எஸ்டேட், உலோகத் துறை குறியீட்டெண் 1.29 சதவீதம் குறைந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பங்குகளின் விலை 1.90 சதவீதம் வரை உயர்ந்தது.
அதேசமயம், யெஸ் வங்கி, பவர் கிரிட், சன்பார்மா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஓஎன்ஜிசி, ஆர்ஐஎல் பங்குகளின் விலை 2.37 சதவீதம் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்து 39,615 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 26 புள்ளிகள் அதிகரித்து 11,870 புள்ளிகளாக
நிலைபெற்றது.