இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 199 கோடி டாலர் (ரூ.13,930 கோடி) அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணிசமாக அதிகரித்ததையடுத்து, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 199 கோடி டாலர் அதிகரித்து 41,999 கோடி டாலராக (ரூ.29.39 லட்சம் கோடி) உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 205 கோடி டாலர் குறைந்து 41,800 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 199 கோடி டாலர் உயர்ந்து 39,218 கோடி டாலராக இருந்தது.
தங்கத்தின் கையிருப்பு மாற்றம் எதுவுமின்றி 2,302 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் 8 லட்சம் டாலர் அதிகரித்து 144.5 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 20 லட்சம் டாலர் உயர்ந்து 333.6 கோடி டாலராகவும் இருந்தது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.