பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு
சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் திடீர் சரிவைக் கண்டது.
பொருளாதாரம் மற்றும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த நிலையில் முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
அதன் காரணமாக, பங்கு சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டது.
குறிப்பாக, மோட்டார் வாகனம், நிதி துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து அத்துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 1.30 சதவீதம் வரை சரிந்தது.
அதேசமயம், எண்ணெய்-எரிவாயு, தொலைத்தொடர்பு, எரிசக்தி துறை குறியீட்டெண் 1.07 சதவீதம் வரை உயர்ந்தது.
யெஸ் வங்கி பங்கின் விலை 4.27 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. மேலும், ஐடிசி, வேதாந்தா, மஹிந்திரா நிறுவன பங்குகளின் விலை 3.61 சதவீதம் வரை குறைந்தது.
ஏஷியன்பெயின்ட்ஸ், டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவன பங்குகளின் விலை 2.43 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 117 புள்ளிகள் சரிந்து 39,714 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 23 புள்ளிகள் குறைந்து 11,922 புள்ளிகளில் நிலைபெற்றது.