என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.1,266.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2017-18-ஆம் நிதியாண்டில் என்எல்சி நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.9,083.05 கோடி ஈட்டியிருந்த நிலையில், கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் இது ரூ.8,059.27 கோடியாக குறைந்துள்ளது. பசுமை வரியை நீக்கியது வருவாய் குறைவுக்கு காரணமாக அமைந்தது. நிகர லாபம் ரூ.1,848.78 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,266.97 கோடியானது.
31.3.2019 அன்றுடன் நிறைவடைந்த 2018-19-ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மின் நிலையங்கள் 2,067.70 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளன.
2017-18-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ரூ.372.57 கோடிக்கு பழுப்பு நிலக்கரி விற்பனை செய்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் அதன் விற்பனை 55 சதவீதம் அதிகரித்து ரூ.579.28 கோடியை எட்டியது.
மேலும், 2018-19-ஆம் நிதியாண்டில் புதிய திட்டங்களை அமைக்க முதல் முறையாக ரூ.7,111 கோடி மதிப்பிலான தொகை முதலீடு செய்யப்பட்டதாக அந்த செய்திக்குறிப்பில் என்எல்சி தெரிவித்துள்ளது.