தனியார் துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கியின் முதல் காலாண்டு லாபம் 18.04 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செபியிடம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த வருவாய் ரூ.34,324.45 கோடியாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.28,000.06 கோடியாக காணப்பட்டது. ஒட்டுமொத்த லாபம் ரூ.4,808.35 கோடியிலிருந்து 18.04 சதவீதம் அதிகரித்து ரூ.5,676.06 கோடியைத் தொட்டது.
மதிப்பீட்டு காலாண்டில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் ரூ.9,538.62 கோடியிலிருந்து (1.33 சதவீதம்) அதிகரித்து ரூ.11,768.95 கோடியாகி (1.40 சதவீதம்) உள்ளது. நிகர வாராக் கடன் விகிதமும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 0.41 சதவீதத்திலிருந்து உயர்ந்து 0.43 சதவீதமாகியுள்ளது.
எதிர்பாராத செலவினங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.1,629.37 கோடியிலிருந்து மிகவும் அதிகரித்து ரூ.2,613.06 கோடியாக இருந்தது என்று செபியிடம் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.