அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 4-ஆவது இடத்தில் இருப்பதாக "ரேசர் பே - தி ஈரா ஆஃப் ரைசிங் பின்டெக்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசர் பே நிறுவனம் சார்பில் தி எரா ஆஃப் ரைசிங் பின்டெக் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷில் மாத்துர் அறிக்கையை வெளியிட்டுத் தெரிவித்ததாவது: தேசிய அளவில், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உடனடி பணப் பரிவர்த்தனைக்கு மக்களால் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் கார்டுகளின் பங்களிப்பு 2018-19 நிதிஆண்டின் 2-ஆம் காலாண்டில் 50% ஆக இருந்தது. முதல் காலாண்டில் இருந்து, இது 22% வளர்ச்சி கண்டுள்ளது.
யூ.பி.ஐ பங்களிப்பு கடந்த இரண்டு காலாண்டுகளில் 71% வளர்ச்சி கண்டுள்ளது. யூ.பி.ஐ பரிவர்த்தனையில் கூகிள் பே 57% பங்களிப்பு செய்துள்ளது. போன்பே 82% வளர்ச்சி கண்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை, 2019 இரண்டாம் காலாண்டில், டிஜிட்டல் பரிவர்த்தனையில், உணவு மற்றும் பானங்கள் (31%), கேமிங் (13%) மற்றும் நிதி சேவைகள் (12%) வளர்ச்சி அடைந்து உள்ளது. கேமிங் துறை, கடந்த காலாண்டில் உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல், மற்ற விளையாட்டு நிகழ்வுகள் காரணமாக 244% வளர்ச்சியைக் கண்டுள்ளது. புதிய பரிவர்த்தனை முறையான யூ.பி.ஐ க்கு வரவேற்பு இருக்கிறது.
அதிக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் ஹைதராபாத், மும்பை, புணே மற்றும் புதுதில்லி உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனையில், முதல் 5 மாநிலங்களில் கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரம் ஆகியவை உள்ளன என அவர் தெரிவித்தார்.