மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் வழங்கிய கடன் கடந்த நிதியாண்டில் 40 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து ஈக்விஃபேக்ஸ் மற்றும் சிட்பி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-18 நிதியாண்டின் கால கட்டத்தில் மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள் ரூ.1,27,223 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியிருந்தன. இந்த நிலையில், 2018-19-ஆம் நிதியாண்டில் இந்த கடன் தொகை 40 சதவீதம் அதிகரித்து ரூ.1,78,587 கோடியை எட்டியுள்ளது.
நடப்பாண்டு மார்ச் இறுதி நிலவரப்படி வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கடனில் 10 மாநிலங்களின் பங்களிப்பு மட்டும் ரூ.1,48,440 கோடியாக உள்ளது. அந்த முதல் 10 மாநிலங்களில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களின் பங்களிப்பு மட்டும் 34.7 சதவீதம் அளவுக்கு உள்ளது. இதனைத் தொடர்ந்து, பிகார் மற்றும் கர்நாடக மாநிலங்கள் ரூ.15,000 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளன.
கடந்த நிதியாண்டில் பிகாரில் வழங்கப்பட்ட கடன்கள் 54 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.