மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் கார்களின் விலையை ரூ.10,000 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
அந்நியச் செலாவணி விகிதத்தில் காணப்பட்ட அதிக அளவிலான ஏற்ற இறக்கம் மற்றும் மூலப் பொருள்களின் விலை உயர்வு ஆகியவை நிறுவனத்துக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கார்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து மாடல் கார்களின் விலையும் ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
மாருதி சுஸுகி இந்தியா ரூ.2.53 லட்சம் விலை கொண்ட ஆல்டோ 800 கார் முதல் ரூ.11.45 லட்சம் விலையுள்ள எஸ்-கிராஸ் கார் வரை விற்பனை செய்து வருகிறது.