இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால், சென்செக்ஸ் சரிவுடன், நிஃப்டி லேசான ஏற்றத்துடனும் நிறைவு பெற்றன.
பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரமானது பலவீனமான வளர்ச்சி வேகத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால், சர்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்தபோதிலும் அது இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கைகொடுக்கவில்லை.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள கோட்டக் வங்கி பங்குகளின் விலை 3.71 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், இன்டஸ்இண்ட் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐடிசி பங்குகளும் சரிவை சந்தித்தன.
அதேசமயம், யெஸ் வங்கி பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து அதன் பங்குகளின் விலை 3.23 சதவீதம் அதிகரித்தது. இதையடுத்து, வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி, ஓஎன்ஜிசி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் பங்குகளின் விலை 2.86 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வங்கி மற்றும் நிதி துறை குறியீட்டெண்கள் 0.43 சதவீதம் வரை இறக்கத்தை சந்தித்தன. எரிசக்தி, நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண்களும் பின்னடைவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 26.87 புள்ளிகள் குறைந்து 35,871 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 1.80 புள்ளி உயர்ந்து 10,791 புள்ளிகளில் நிலைத்தது.