வாடகைக் கார் சேவை நிறுவனமான ஓலாவில், ஃபிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார்.
இதன் மூலம், இந்திய நிறுவனமான ஓலா கேபுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த உபெர் நிறுவனத்துடன் போட்டியிடும் திறன் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஃபிளிப்கார்ட்டை நிறுவியவர்களில் ஒருவரான தொழிலதிபர் சச்சின் பன்சால், எங்களது நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார்.
தனிநபர் ஒருவர் எங்களது நிறுவனத்தில் இவ்வளவு தொகை முதலீடு செய்தது இதுவே முதல் முறையாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓலா கேப் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் கூறியதாவது:
எங்களது முதலீட்டாளர்களில் ஒருவராக சச்சின் பன்சால் இருப்பது பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.
இந்திய தொழில்முனைவின் அடையாளமாகத் திகழும் அவர், நாட்டின் மிகச் சிறந்த நிறுவனங்களை உருவாக்குவதில் மிகுந்த அனுபவம் மிக்கவர் என்றார் அவர்.
100 கோடி டாலர் (சுமார் ரூ.7,140 கோடி) மூலதனம் திரட்டும் ஓலா கேப் நிறுவனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சச்சின் பன்ஸாலிடமிருந்து இந்தத் தொகை முதலீடாகப் பெறப்பட்டுள்ளது.
இணையவழி வர்த்தக சேவை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டை பின்னி பன்சாலுடன் இணைந்து கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய சச்சின் பன்சால், கடந்த ஆண்டில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திலிருந்து விலகியது நினைவுகூரத்தக்கது.