அந்நிய முதலீடுகள் வெளியேற்றத்தால் மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 157 புள்ளிகள் இழப்பை சந்தித்தது. இதையடுத்து, தொடர்ந்து ஆறாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
சர்வதேச சந்தைகளின் சாதகமற்ற நிலவரங்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளிலிருந்து முதலீட்டு விலக்கி கொண்டது ஆகியவற்றின் காரணமாக பங்குச் சந்தையில் வர்த்தகம் சுணக்கமாக இருந்தது.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், உலோகம், எரிசக்தி துறை பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்த்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ், ஏஷியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹெச்டிஎஃப்சி நிறுவனம், டிசிஎஸ், ஓஎன்ஜிசி, மஹிந்திரா & மஹிந்திரா பங்குகளின் விலை 3.09 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த அதீத வரவேற்பால் யெஸ் வங்கி பங்கின் விலை 30.73 சதவீதம் வரை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 157 புள்ளிகள் சரிந்து 35,876 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 840 புள்ளிகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் குறைந்து 10,746 புள்ளிகளாக நிலைத்தது.