அரசு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிப் பயன்படுத்துவதற்காக இ-மார்க்கெட் பிளேஸ் என்ற இணைய சந்தை வலைதளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களுடைய நிறுவனம் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்து அந்த வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்களிடமிருந்து அரசுத் துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களைக் கொள்முதல் செய்யப்படும். பொருள்களின் மதிப்பை பொருத்து, உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாகவும், ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாகவும் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இந்த வலைதளத்தில் சுமார் 7.53 லட்சம் பொருள்களும், 4 ஆயிரம் சேவைகளும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தின் மூலம் இதுவரை சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
அரசுத் துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு கொள்முதலில் 20 சதவீத பொருள்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதைக் கட்டாயமாக்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. தற்போது 2019-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் இது 25 சதவீதமாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் 3 சதவீதம் மகளிர் தொழில்முனைவோரிடமிருந்து கொள்முதல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டள்ளது. அதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களை அந்த வலைதளத்தில் பதிவு செய்து கொண்டு பயனடையலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://gem.gov.in/