முன் எப்போதும் இல்லாத பொருளாதார சூழ்நிலையை சீரமைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுவதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக ஹீரோ நிறுவனத்தின் 2019 மைன்ட்மைன் கூட்டமைப்பில் ராஜிவ் குமார் பேசியதாவது:
கடந்த 70 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பணப்புழக்கமும், அடுத்தவர் மீதான நம்பகத்தன்மையும் குறைந்துவிட்டது. குறிப்பாக தனியார் துறையில் இப்போக்கு அதிரித்து காணப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வங்கி மோசடி உள்ளிட்டவற்றின் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் 10 முதல் 35 சதவீதம் வரை பணப்புழக்கம் இருந்து வந்தது மக்களுக்கு உதவிகரமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மிகவும் குறைந்துவிட்டது.
இதுபோன்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை சீரமைக்க அசாதாரண நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.