உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி, ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
உஜ்ஜீவன் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. நிறுவன சட்டம் 2013-இன் விதிமுறைகளுக்கு இணங்க, பங்கு ஒவ்வொன்றின் முக மதிப்பு ரூ.10 என்ற விலையில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.1,200 கோடி திரட்டிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டுக்கு செபியின் அனுமதி கோரி தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம் மற்றும் இதர காரணிகளை கருத்தில் கொண்டு அதற்கேற்ற வகையில் இந்த பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும் என்று உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி தெரிவித்துள்ளது.