தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) முதல் காலாண்டு லாபம் 212 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் டிஎன்பிஎல்-இன் மொத்த வருமானம் ரூ.960.63 கோடியாக இருந்தது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.935.24 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.38.84 கோடியிலிருந்து ரூ.114.28 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 194 சதவீத உயர்வாகும்.
மதிப்பீட்டு காலாண்டில், நிகர லாபம் 212 சதவீதம் அதிகரித்து ரூ.77.10 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.24.69 கோடியாக காணப்பட்டது.
முதல் காலாண்டில், தேய்மானங்களுக்காக ரூ.57.10 கோடியும், நிதி செலவினங்களுக்காக ரூ.54.39 கோடியும் ஒதுக்கப்பட்டது.
சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் காகித உற்பத்தி 1,02,515 டன்னிலிருந்து 1,09,216 டன்னாக அதிகரித்துள்ளது. காகித அட்டை உற்பத்தி 46,247 டன்னிலிருந்து 36,502 டன்னாக குறைந்துள்ளது.
ஜூன் காலாண்டில் 1,02,671 டன் காகிதமும், 36,319 டன் காகித அட்டையும் விற்பனை செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் டிஎன்பிஎல் தெரிவித்துள்ளது.