எல்ஐசியின் ஒரு அங்கமான ஐடிபிஐ வங்கியின் இழப்பு முதல் காலாண்டில் ரூ.3,800 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,923.93 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.6,402.50 கோடியுடன் ஒப்பிடுகையில் இது மிக குறைவாகும்.
அதன் காரணமாக, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,409.89 கோடியாக காணப்பட்ட இழப்பு நடப்பு நிதியாண்டில் ரூ.3,800.84 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேநேரம், வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 30.78 சதவீதத்திலிருந்து குறைந்து 29.12 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 18.76 சதவீதத்திலிருந்து மிகவும் சரிந்து 8.02 சதவீதமாகவும் இருந்தது என செபியிடம் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரியில்தான் ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி 51 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.