ஆசியாவின் மிகப்பெரிய தலைக்கவச (ஹெல்மெட்) தயாரிப்பாளரான ஸ்டீல் பேர்டு ஹை-டெக் இந்தியா, ஜம்மு-காஷ்மீரில் ஆலை அமைக்க தயாராக உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. ஜம்மு-காஷ்மீரில் 35-ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் இந்த அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டீல்பேர்டு ஹெல்மெட் நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் கபூர் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370-ஆவது பிரிவை நீக்கியுள்ள நடவடிக்கை அனைவரும் நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த முடிவு. இதன் மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் முக்கிய நிறுவனங்கள் கால்பதிப்பது சாத்தியமாகியுள்ளது. இது, ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கும் முக்கியமான பங்களிப்பை வழங்கும்.
ஸ்டீல்பேர்டு நிறுவனத்தைப் பொருத்தவரையில் ஜம்மு-காஷ்மீரில் ஆலை அமைத்து செயல்பட ஆர்வத்துடன் உள்ளது. அக்டோபரில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்களின் மாநாட்டில் இதுகுறித்த முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளோம். பள்ளத்தாக்கு பகுதியிலும் இதே விதிமுறைகளின் கீழ் வர்த்தகத்தை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.
ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஹிமாசலப் பிரதேசத்தில் உள்ள படியில் உற்பத்தி ஆலையை ரூ.150 கோடி முதலீட்டில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
தற்போது இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஹெல்மெட் உற்பத்தியை 44,500-ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.