டிஜிட்டல் முறையில் கார் மற்றும் இருசக்கர வாகன கடன்களுக்கு உடனடி ஒப்புதல் வழங்கப்படும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் தலைவர் (ரீடெயில் செக்யூர்டு அசெட்ஸ்) ரவி நாராயணன் கூறியுள்ளதாவது:
புதுமையான திட்டம் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதில் ஐசிஐசிஐ வங்கி முன்னோடியாக உள்ளது. புள்ளிவிவரம் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவற்றை வங்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது கார் மற்றும் இருசக்கர வாகன கடன் வசதியும் சேர்ந்துள்ளது.
இந்த டிஜிட்டல் முறையில் ஒப்புதல் பெறும் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இனி சிக்கல் இல்லாமல் சில மணி நேரங்களில் வாகன கடனை பெறலாம். வாகனத்தின் ஆன்-ரோடு விலைக்கு தேவையான முழு நிதி உதவியும் வழங்கப்படும். ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான கடனை இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இனிமேல் கடன் ஒப்புதல் கடிதத்துக்காக வங்கி கிளைக்கு வாடிக்கையாளர்கள் வர வேண்டிய அவசியமில்லை. இணையதள வங்கி சேவை மூலமாகவே சில சொடுக்குகள் மூலம் ஒப்புதல் அனுமதி கடிதத்தை வாடிக்கையாளர்கள் உருவாக்கி கொள்ள முடியும் என்றார் அவர்.