எனது திருமணம் எப்பொழுது நடக்கும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? பெற்றோரை இறுதிவரை காப்பாற்ற நினைக்கிறேன்... அது நிறைவேறுமா? பெற்றோரின் ஆயுள், ஆரோக்கியம் குறித்தும் கூறவும்..!
-வாசகி, புதுச்சேரி.
உங்களுக்கு கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னாதிபதி புத பகவான் அஷ்டம ஸ்தானத்தில் லாபாதிபதி, மூலத்திரிகோணம் பெற்றுள்ள அஷ்டமாதிபதிகளுடன் இணைந்திருக்கிறார்.சந்திர கேந்திரத்தில் செவ்வாய் பகவான் மூலத்திரிகோணம் பெற்றிருப்பதால், பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெறுகிறார்.
ஐந்து, ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான சனி பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் கேது பகவானுடன் இணைந்திருப்பதும் சிறப்பு. தன பாக்கியாதிபதி சுக்கிர பகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்தில் மூலத்திரிகோணம் பெற்றிருக்கும் குரு பகவானைப் பார்வை செய்கிறார். தற்சமயம் லாபாதிபதியின் தசை முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், படித்த நல்ல அந்தஸ்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பெற்றோருக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பீர்கள். அவர்களுக்கும் தீர்க்காயுள் உண்டு. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.