நான் பெங்களூரில் வேலை பார்க்கிறேன். தற்போது நிறைய கடன் வாங்கி இங்கு ஒரு பிளாட் வாங்கி இருக்கிறேன். வெளியூரில் வசிக்கும் வயதான பெற்றோர் அங்குள்ள வீட்டை விற்றுவிட்டு, என் வீட்டுக்கு அருகிலேயே வீடு வாங்கலாமா என்று கேட்கிறார்கள். எனக்கு இந்த ஊரிலேயே நிரந்தரமாக வசிக்கும் யோகம் உண்டா?
-வாசகர், பெங்களூரு.
உங்களுக்கு சிம்ம லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். ஐந்து மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான குரு பகவான் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று
அமர்ந்திருக்கிறார்.
சுக பாக்கியாதிபதி செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். மூன்றாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அயன ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்திருக்கும் ஆறு, ஏழாம் வீடுகளுக்கு அதிபதியான சனிபகவானை பார்வை செய்கிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும் படிகிறது.
குரு பகவானின் ஏழாம் பார்வை தைரிய ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை நான்காம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும் படிகிறது. மூன்றாம் வீட்டில் ராகு பகவானும், ஒன்பதாம் வீட்டில் கேது பகவானும் இருப்பது சிறப்பாகும். தர்மகர்மாதிபதிகளான செவ்வாய், சுக்கிர பகவான்கள் பரஸ்பரம் சமசப்தம பார்வை செய்து கொள்வது முழுமையான தர்மகர்மாதிபதி யோகமாகும். அதோடு அவர்கள் இருவரும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் பலம் கூடுகிறது.
தற்சமயம் புத மஹா தசையில் ராகு பகவானின் புக்தி நடக்கிறது. உங்களுக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு பணியில் பல மாற்றங்கள் உண்டாகும். வெளிநாட்டிற்கும் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் பெற்றோரை அவர்கள் வசிக்கும் ஊரிலேயே இருக்க சொல்லவும். பிரதி புதன்கிழமைகளில் ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.