எனது முதல் திருமணம் ஏழு நாள்களும், இரண்டாம் திருமணம் ஏழு ஆண்டுகளும் நிலைத்தது. தற்பொழுது மூன்றாம் திருமணத்திற்கு முயற்சி செய்து வருகிறேன். எவ்வாறு அமையும்... மேலும் வேலையும் போய், சொற்ப வருமானம்தான் வருகிறது. எப்பொழுது வாழ்க்கை மறுமலர்ச்சி பெறும்?
-வாசகர், சேலம்.
உங்களுக்கு மேஷ லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம். சுகாதிபதி சந்திரன் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ஆட்சி பெறுவது சிறப்பு. லக்னாதிபதி லக்னத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்து பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைப் பெற்று பாக்கியாதிபதியான குரு (குரு மங்கள யோகம்) பகவானுடன் இணைந்து இருப்பதும் சிறப்பு.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை ஐந்தாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஏழாம் பார்வை ஏழாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீதும் படிகிறது.
ஐந்தாமதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். தொழில், லாபாதிபதி சனி பகவான் சுக ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்து, தன் ஆட்சி வீடான தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இவர்களுடன் புத பகவானும் இணைந்திருக்கிறார்.
கேது, ராகு பகவான்கள் இரண்டு, எட்டாம் வீடுகளில் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் கேது மஹா தசை முடிந்து, சுக்கிர மஹா தசை நடக்கத் தொடங்கி ஐந்து மாதங்கள் ஆகின்றன. இன்னும் 14 மாதங்கள் கழித்து, படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து மூன்றாம் திருமணம் நடக்கும். அதே போல் அதுவரையில் செய்தொழிலும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உங்களின் 48 ஆவது வயது தொடங்கியவுடன் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.