என் மகளின் ஜாதகத்தில் தோஷம் ஏதாவது இருக்கிறதா? மூலம் நட்சத்திரம், அதனால் எப்பொழுது திருமணம் நடக்கும்? எப்பொழுது வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?
-வாசகி, சென்னை.
உங்கள் மகளுக்கு கடக லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். கடக லக்னத்திற்கு லக்னாதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது. "சந்திர பகவான் கேது பகவானின் நட்சத்திரத்தில் அதாவது மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பது குறை இல்லை' என்று பலமுறை எழுதியிருக்கிறோம். "மூல நட்சத்திர பெண்களை ஒதுக்குவதால் நல்ல வலுவான கிரக அமைப்புள்ள பெண்களை ஒதுக்குவதற்கு சமம்' என்றும் எழுதியிருக்கிறோம்.
பொதுவாக திருமணம் செய்யும்போது, ஆண் ஜாதகத்தை விட பெண் ஜாதகம் பல விதங்களிலும் பலம் பெற்றதாக குறிப்பாக லக்ன சுபர்களின் தசைகள் நடக்க வேண்டும் என்பார்கள். இதனால்தான் "ஏறு பிடித்தவன் என்ன செய்வான்; பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்கிற வழக்கு வந்தது.
கடக லக்னத்திற்கு சூரிய தசையிலிருந்து தொடர்ந்து 23 ஆண்டுகள் யோக தசையாக நடக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் "சந்திர மங்கள யோகம்' உண்டாகிறது. இவர்களுடன் புத, சுக்கிர பகவான்களும் இணைந்திருக்கிறார்கள். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் நீச்சம் பெற்று, அந்த வீட்டுக்கதிபதியான சனி பகவான் மீன ராசியில் அமர்ந்திருப்பதால் "பரிவர்த்தன ராஜ யோகம்', "நீச்ச பங்க ராஜ யோகம்' ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன.
தனாதிபதி குடும்பாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. ராகு, கேது பகவான்கள் இரண்டு, எட்டாம் வீடுகளில் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சுக்கிர பகவானின் தசை முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். காலச் சக்கர தசைப்படி சூரிய பகவானின் தசை 22 வயதுக்குப் பிறகு நடக்கத் தொடங்க வேண்டும் என்று உள்ளது.
உங்கள் மகளுக்கு சூரிய மஹா தசை யோக தசையாகி 24 வயதில் நடக்கத் தொடங்குகிறது. அதனால் மண வாழ்க்கை, குடும்பம், புத்திர பாக்கியம், எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.