என் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? நல்ல வேலையில் பெங்களூருவில் இருக்கும் அவருக்கு பதவி உயர்வு எப்பொழுது கிடைக்கும்? வெளிநாடு செல்வாரா?
-வாசகர், திருச்சி.
உங்கள் மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். விருச்சிக ராசிக்கு அதிபதியான பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் (ருசக யோகம்) சந்திர பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.
ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீடான தன் மூலத் திரிகோண வீட்டையும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் குடும்பாதிபதியான சூரிய பகவானையும் (சிவராஜ யோகம்) புத பகவானையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் பகவானுடன் சுக லாபாதிபதியான சுக்கிர பகவானும், களத்திர நட்பு அஷ்டமாதிபதியான சச மஹா யோகம் பெற்றிருக்கும் சனிபகவானும் இணைந்திருக்கிறார்கள்.
தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் சனி பகவானின் புக்தி முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்க பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்திற்குள் பதவி உயர்வும் பெறுவார். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.