எனக்கு நீச்சம் பெற்றுள்ள செவ்வாய் தசை நடப்பதால் என் பெயரில் உள்ள சொத்துகளை விற்று விடவோ அல்லது மனைவியின் பெயருக்கு மாற்றி விடவோ வேண்டும் என்று கூறுகிறார்கள். என்ன செய்ய வேண்டும்?
-வாசகர், கோவை.
உங்களுக்கு கடக லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் வாழப் பிறந்தவர் என்று கூறவேண்டும்.
பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானாதிபதி, தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். கடக ராசிக்கு அதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.
ஒன்பதாமதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஒன்பதாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (கஜகேசரி யோகம்), ஒன்பதாம் பார்வையாக பதினொன்றாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் புத பகவானையும் பார்வை செய்கிறார்.
தற்சமயம் செவ்வாய் பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. செவ்வாய் பகவான் அதிபலம் பெற்றிருப்பதால் செவ்வாய் பகவானின் தசை அதிர்ஷ்ட தசையாகச் செல்லும்.
புதிய வாய்ப்புகளும் தேடிவரும். வெளிநாடு சென்று வரவும் கூடும். அதனால் அசையா சொத்துகளை விற்க வேண்டாம்; உங்கள் மனைவியின் பெயருக்கும் மாற்ற வேண்டாம். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.