என் மகன் எம்எஸ்சி கணினி படித்திருக்கிறார். அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? துலாம் லக்னமா அல்லது விருச்சிக லக்னமா என்பதைக் கூறவும்?
செல்லமணி, மதுரை.
உங்கள் மகனுக்கு துலாம் லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் என்று வருகிறது. லக்னாதிபதி, அஷ்டமாதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். நான்கு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான சனிபகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றமர்ந்து ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான ருசக யோகம் பெற்றுள்ள செவ்வாய் பகவானையும் (குரு மங்கள யோகம்), பாக்கிய விரயாதிபதியான புத பகவானையும் பார்வை செய்கிறார். குரு பகவானின் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச் சந்திர யோகம்) படிகிறது. லாபாதிபதியான சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்திலமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு வேலை இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கிடைக்கும். அதுவரை அவரை தனியார் கணினி நிறுவனங்களில் தகுதிக்கேற்ற வேலை பார்க்கச் சொல்லவும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.