என் மகன் வெளிநாடு சென்று மேலாண்மைப் படிப்பு படித்து விட்டு சென்னையில் நல்ல வேலையில் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக திருமணத்திற்கு முயற்சி செய்கிறோம். தடைகள் ஏற்படக் காரணம் என்ன? பரிகாரம் சொன்னால் செய்கிறோம். மறுபடியும் அவர் வெளிநாடு செல்வாரா?
வாசகி, சென்னை.
உங்கள் மகனுக்கு மகர லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதம். லக்னம், குடும்பாதிபதி சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுக லாபாதிபதியான வர்கோத்தமம் பெற்ற செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார்.
தைரிய ஸ்தானத்திற்கும், அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குரு பகவானுடன் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவானும் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை அஷ்டம ஸ்தானமான ஆயுள் ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஏழாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும், செவ்வாய் பகவானின் மீதும் (குரு மங்கள யோகம்) படிகிறது. ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு, சுக்கிர பகவான்கள் பரஸ்பரம் விரோதம் பெற்றவர்களாகி சுக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது திருமணத்தைத் தாமதப்படுத்துகிறது. அஷ்டமாதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருப்பதும், நவாம்சத்தில் அவருடன் உச்ச குருபகவான் இணைந்திருப்பதும் சிறப்பு.
லக்னாதிபதி பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது ஜாதகர் வெளிநாட்டில் வசிக்கும் யோகத்தைக் கொடுக்கும் அம்சமாகும். அதோடு பன்னிரண்டாம் வீட்டில் வர்கோத்தமம் பெற்று இருக்கும் சுக லாபாதிபதியும் இருந்து அவர்கள் இருவருக்கும் குரு பகவானின் பார்வை கிடைப்பதால் வெளிநாட்டில் நெடுங்காலம் வசிக்கும் யோகத்தைக் குறிக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தற்சமயம் புத பகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி திங்கள்கிழமைகளில் பார்வதி, பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.