எனக்கு கல்யாணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அரசு வேலையில் உள்ளேன். கடும் மன உளைச்சல் அடிக்கடி ஏற்படுகிறது. மழலை பாக்கியத்திற்கு செயற்கை முறையில் முயற்சி செய்யலாமா? எப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும்? எந்தக் கடவுளை வழிபட்டு வர வேண்டும்?
வாசகி, சென்னை.
உங்களுக்கு மிதுன லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்று லக்னாதிபதியான புத பகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. அதோடு சுக்கிர பகவான் நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார்.
புத்திர காரகனான குரு பகவான் சுக ஸ்தானத்திலமர்ந்து ஒன்பதாம் பார்வையாக பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் புத்திர ஸ்தானாதிபதியான சுக்கிர பகவானைப் பார்வை செய்வதால் புத்திர பாக்கியம் உண்டு என்று உறுதியாகக் கூற வேண்டும்.
தற்சமயம் குரு மஹா தசையில் அஷ்டம பாக்கியாதிபதியான சனி பகவானின் புக்தி 19.10.2022 வரை நடப்பதாலும், சனி, குரு பகவான்கள் குடும்பாதிபதியுடன் சுக ஸ்தானத்தில் இணைந்திருப்பதாலும் மேற்கூறிய காலகட்டத்திற்குள் செயற்கை முறையில் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.