எனது மகன் என் பெயரில் தொழில் தொடங்க விரும்புகிறார். ஜாதகப்படி எனக்கு தொழில் ஸ்தானம் எவ்வாறு உள்ளது? கடன்களை அடைக்கும் அளவுக்கு வருமானம் வருமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
வாசகி, ஸ்ரீரங்கம்.
உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி, பூசம் நட்சத்திரம். லக்னாதிபதி, லக்னத்தில் உச்சம் பெற்றுள்ள குரு பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் சிறப்பான குரு சந்திர யோகம் உண்டாகிறது.
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் உச்சம் பெற்று, லக்னத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதி, பாக்கியாதிபதிகளைப் பார்வை செய்கிறார். இது மூன்று திரிகோனாதிபதிகளின் சேர்க்கை என்று புரிந்து கொள்ள வேண்டும். பாக்கியாதிபதி குரு பகவான் நவாம்சத்தில் ஆட்சி வீடான மீன ராசியை அடைந்து செவ்வாய் பகவானுடன் இணைந்திருக்கிறார். இதனால் தர்மகர்மாதிபதிகள் வலுவாக இருக்கிறார்கள் என்றும் கூற வேண்டும்.
தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் உங்கள் பெயரில் செய்யத் தொடங்கும் தொழில் அபிவிருத்தி அடையும். வருமானமும் படிப்படியாக உயரும். குருபகவானே கடன் வீடான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாவதால் கடன்களில் இருந்தும் முழுமையாக விடுபட்டு விடுவீர்கள். பரிகாரம் எதுவும் தேவையில்லை.